பப்ஜி விளையாட்டை இந்தியாவில் சிறுவர்கள் இளைஞர்கள் என பலரும் விளையாடி வருகின்றனர் இந்த விளையாட்டு இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது. தற்பொழுது ஊரடங்கு காரணமாக இந்த விளையாட்டை விளையாடுவோரின் எண்ணிக்கை சற்று அதிகமாகவே உள்ளது. பப்ஜி விளையாடுவதால் உடல்நல ரீதியான பிரச்சினைகள் மற்றும் பல உயிரிழப்புகள் கூட நேர்கிறது.இந்நிலையில் தற்பொழுது ஒரு சிறுவன் இந்த விளையாட்டில் பெற்றோரின் வங்கி கணக்கில் உள்ள 16 லட்சம் செலவிட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அவரது தாயாரின் ஸ்மார்ட்போனில் தொடர்ந்து பப்ஜி ஆடி வந்துள்ளார்.தாயார் கேட்டபோது தான் படித்து கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.மேலும் இவர் இந்த விளையாட்டில் வெற்றி பெற புதிய தரவிறக்கங்களை செய்யவும் பெற்றோரின் வங்கி கணக்கில் இருந்து 16 லட்சம் இதற்காக செலவிட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.அந்த சிறுவன் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுத்தது தெரியாமல் இருக்க வங்கியில் இருந்து வரும் மெசேஜ்களை டெலீட் செய்துள்ளார்.
அந்த பணம் அச்சிறுவனின் எதிர்காலம் மற்றும் மருத்துவ செலவிற்காக சேமிக்கப்பட்டதாக அவர் தந்தை தெரிவித்துள்ளார்.பெற்றோர் காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்த போது இந்த பணம் தெரிந்தே செலவிடப்பட்டதால் ஒன்றும் செய்ய முடியாது என காவல் துறையினர் கூறியுள்ளனர்.இதனை அடுத்து அச்சிறுவனின் தந்தை அவனை வாகனங்கள் பழுது பார்க்கும் கடைக்கு வேலைக்கு அனுப்பி வைத்தார்.மேலும் சிறுவனின் தந்தை கூறியதாவது,இனிமேல் அவனை வீட்டில் எந்த வேலையும் இல்லாமல் வைத்திருக்க போவதில்லை,அவனுக்கு படிப்பிற்கு கூட இனி மொபைல் கிடையாது என கூறியுள்ளார்.இந்தியாவில் பலரும் இதற்கு அடிமையாகி உள்ளதால் இந்த செயலியை தடை செய்ய பல்வேறு தரப்பில் இருந்து கோரிக்கை வந்த வண்ணமே உள்ளது.